தமிழ் இலக்கியப் படைப்புகளில் 1900 முதல் 1930 வரை வெளிவந்தவற்றை ஆய்வு நோக்கில் அணுகி வகைப்படுத்தியுள்ள நுால். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், பத்திரிகை என அனைத்து தளத்திலும், 30 ஆண்டுகளில் வந்தவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுரை நுால்கள் என்ற தலைப்பில் திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு மற்றும் பதிப்பான நுால்களையும் விளக்கியுள்ளதுடன், முக்கிய நிகழ்வுகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதியின் கண்ணன் பாடல்கள், குயில் பாட்டு, வ.உ.சி., பாடல் திரட்டு முதலான முக்கிய நுால்களை பதிவிட்டுள்ளார். வை.மு.கோதைநாயகி அம்மாள், நடேச சாஸ்திரி, மாதவையா, ஆரணி குப்புசாமி முதலியார் முதலான படைப்பாளர்களை நாவல் வரலாற்றுடன் இணைத்து எழுதியுள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் பலவற்றை குறிப்பிட்டுள்ளதுடன், இவற்றில் மறுமணம் முக்கிய இடம் வகித்த தன்மையையும் தெளிவுபடுத்தியுள்ளார். இலக்கிய வரலாற்று ஆவணமாக வெளிவந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்