சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 240.)
நம் பண்டைய தமிழர்கள் வருங்கால சந்ததியினர் அவர்தம் கலாசாரம், நாகரிகம், பண்பாடுகள், சமுதாயம் மற்றும் அரசியல் அமைப்புகளைப் பற்றியெல்லாம் அறிந்து, புரிந்து கொள்ளுதல் வேண்டுமென்ற தொலை நோக்கில் விட்டுச் சென்ற தடயங்கள் தான் எத்தனை, எத்தனை? கல்வெட்டுகள், சிற்பங்கள், திருக்கோயில்கள், நாணயங்கள், ஏடுகள், ஏட்டுச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், சமய இலக்கியங்கள் என எண்ணிலடங்கா! இந்நூலாசிரியர் தெரிவு செய்தது. பல்லவர் ஆட்சியில் தொண்டை மண்டலப் பகுதியில் (தற்போதைய கடலூர்), பாதிரி மரங்கள் நிறைந்த திருப்பாதிரிப்புலியூர் எனப்படும் திருத்தலத்தில் அமைந்த சிவன் கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளேயாகும்!
இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள், செய்திகளை நுண்ணியமாக ஆய்ந்து, நிழற்படங்கள், புராண கதைகள், பதிகங்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற அனைத்து தகவல்களையும் கடும் உழைப்பை காணிக்கையாக்கி இந்நூலாசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆன்மிகம் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு உகந்த நூல் இது!