இலக்கியப் பீடம் பதிப்பகம், மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 166. விலை: ரூ.60)
இலக்கியப் பீடத்தின் நாவல் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற நாவல் அலகிலா விளையாட்டு என்ற இப்படைப்பு. கதைத் தலைவனே கதையைச் சொல்லுவது போல் ஒரு புதிய உத்தியை புதின இலக்கியத்தில் கால் பதித்து காட்டியிருப்பது சிறப்பாக இருக்கிறது. எளிய நடை, கூறுவது கூறாததும் நேரிடையாக செய்தியை சொல்லத் தெரிந்த லாவகம், நாவலை விரைவாகவும், சோர்வில்லாமலும் படிக்கத் தூண்டுகிறது.
கண்ணுக்குப் புலப்படுகிற இந்த உலகம் ஓங்காரத்தின் படிவம் (பக்கம் 35). ஆன்மாவுக்கு நான்கு பரிமாணங்கள், வைசுவானரன், தைஜஸன், பிராந்தன், நான்காவது பெயரற்ற நிலை. இதுவே ஆன்மாவின் உயரிய நிலை. ஓம்... ஓம்... ஓம்... என ஆழமான ஆன்மிக சிந்தனைகள் முதல் `நீங்கள் புத்தரை நினைத்துக் கொண்டு இன்றைய கயாவை அணுக வேண்டாம். அது பீகாரின் பிரதான குற்றப் பிரதேசங்களுள் ஒன்று' (பக்கம் 123) என இன்றைய நாட்டின் பிரச்னைகள் போல பல நிகழ்வுகளை கதாபாத்திரங்கள் வாயிலாக சுடச் சுடத் தருகிறார் பா.ராகவன். தனி மனித உணர்வுகள், குடும்பம், சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆழமான, இந்த மண்ணின் பிரதான தத்துவங்களை மையக் கருத்தாக வைத்து நாவலை நகர்த்திக் காட்டுகின்ற நயம் பாராட்டுதற்குரியது. தலை சிறந்த நாவல் வரிசையில் இப்படைப்பும் ஒன்று.