புதுச்சேரி ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை வாழ்ந்த காலத்தில் உடன் தங்கியிருந்த சாதகர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகளை பதிவு செய்துள்ள நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அரவிந்தரின் பள்ளிப் பருவம், ஆசிரியப் பணியில் கற்பித்த விதம், சுதந்திரப் போராட்டத்திற்கான புரட்சிக்கு தனியாகப் பொறுப்பேற்றுக் கொண்டமை, குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தபோது காட்டிய அமைதி, எப்போதும் எளிமையான தோற்றம் போன்றவை பற்றி உள்ளன.
லட்சியம் புனிதமானதாக, உன்னதமானதாக, நேர்மையானதாக இருக்குமானால், சாதகமாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, இளைஞர்களிடம் பழகிய விதம், எவரிடமும் வன்மமோ, கோபமோ இல்லாத தன்மை, யோகப்பாதையில் முன்னேற குள்ளச்சாமி காட்டிய வழி, ஆவியை விரட்டிய சித்து விளையாட்டு போன்றவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஸ்ரீ அரவிந்தரின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம், ஸ்ரீ அன்னை நிகழ்த்திய அற்புதங்கள், வறுமையும், விரக்தியும் சேர்ந்த சன்னியாச வாழ்க்கையை வலியுறுத்தவில்லை. செல்வ வளத்தோடு வாழும் வாழ்க்கையே போதிக்கப்பட்டது.
அசுர சக்தியின் கருவியாகச் செயல்படுபவர் பயன்படாத போது, அந்த அசுர சக்தியே துாக்கி எறிந்துவிடும். ஆனால், தெய்வ சக்தியின் கருவியாகச் செயல்பட்டால், தெய்வம் எப்போதும் கைவிடாது; எப்போதும் முன்னேற ஆர்வமே ஏற்படும்; அதை எப்போதும் எதிர்க்கும் அசுர சக்தி.
ஸ்ரீ அரவிந்தரின் இறுதிக்காலம், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் அருள் மொழிகள் என ஏகப்பட்ட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பக்தர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய புத்தகம்.
– இளங்கோவன்