சரித்திரம் மறவாத சாதனை புரிந்த ராஜதந்திரி சாணக்கியன் பற்றிய விரிவான வரலாற்றை நீண்ட நாவல் வடிவில் பேசும் நுாலின் முதல் பாகம். ஒற்றை மனிதனாய் களத்தில் நின்று, மகதப் பேரரசை வீழ்த்தியவர். மாவீரன் அலெக்சாண்டருக்கு தோல்வியைக் கற்றுத் தர சந்திரகுப்தனை உருவாக்கியவர்.
உடல் வலிமையோடு மன வலிமையும், அறிவு வலிமையும் சேர்ந்தால், உலகில் புதிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிடலாம் என நம்பிக்கை கொண்டிருந்த சாணக்கியர் வரலாறு புதினமாக்கப்பட்டுள்ளது.
வரலாறு நடக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்கிறது. மகத அரசன் தனநந்தன், சாணக்கியரை அரசவையில் அவமானப்படுத்துகிறான். அவனை அழிக்க, குடுமியை அவிழ்த்து சபதம் செய்கிறார் சாணக்கியர். அவரது அர்த்தசாஸ்திர நுால் கருத்துக்களும் அழகாக சேர்க்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் புள்ளிகளை கற்பனைக் கோடுகளால் இணைத்து அழகிய கோலம் போடப்பட்டுள்ளது.
படையெடுத்து வந்த அலெக்சாண்டரையும், எதிரியான தனநந்தனையும் விரட்டி அடித்து, ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கி, சந்திரகுப்தனை சக்கரவர்த்தியாக அமர வைக்கும் வரை சாணக்கியர் ஓயப்போவது இல்லை. ஒவ்வொரு கணமும் அதற்காகவே வாழ்ந்தார் என்பதை மனதில் பதியுமாறு சொல்கிறது. சரித்திர கால சாணக்கியரை கண் முன் நிறுத்தும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்