பாரதி பதிப்பகம், 126/108, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017.
ஆசிரியர் தன் படைப்புக்குத் தேர்ந்தெடுத்த கருப்பொருள், அதன் தலைப்பு ஆகியவையே நூலுக்குப் பாதி வெற்றியைப் பெற்று தந்து விடுகின்றன. "மானுட யாத்திரை. ஆ! எப்பேர்ப் பட்ட தலைப்பு! உலக மானுட இனம் முழுவதையும் எடுத்துக் கொண்டு காடுகளில் காட்டு மிராண்டியாய் அலைந்து திரிந்தது முதல் இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை மனிதன் தன் இடர்களையும் இன்னல்களையும் நீக்கி இன்பம் காணத் தன் சிந்தையின் திறனைப் பயன்படுத்திக் கண்டவற்றை அற்புதமான கவிதை வடிவில் ஒரு காப்பியமாக வழங்கியிருக்கிறார். இந்தக் காப்பியம்; சமுதாயம், அரசியல், அறிவியல், ஆன்மிகம், சமயம் என ஐந்து பிரிவுகளில் மூன்று பாகங்களாக மலர்ந்துள்ளன. மானிட இனத்தின் வாழ்க்கைக் காப்பியம் என்பது ஒரு நீண்ட பயணத்தின் படப்பிடிப்பு. தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கும் ஒரு முடிவில்லாத பயணம். இந்த மகா நீளமான பயணத்தில் எவ்வளவோ தடைகள். அவற்றைத் தாண்டியும் தகர்த்தும் வந்திருக்கிறான் மனிதன்.
அவன் கண்ட "இல்லறம் போன்ற ஓர் அமைப்பை வானுலகோரும் கண்டதில்லை. கல்வி போன்ற ஒரு கருவி அவன் கண்டது. படைக்கும், காக்கும், அழிக்கும் திறன் கொண்டது. ஆண்டவனை நிகர்த்தது. அதற்கு ஒப்பான மற்றொன்று மண்ணிலுமில்லை; விண்ணிலுமில்லை.இந்த மானுட யாத்திரையின் மகத்துவத்தை அற்புதமான கவிதையில் ஒரு குறுங்காப்பியமாகப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
மாண்டபிறகு மீண்டும் பிறவியே வேண்டாம் என்று கைலாசத்திற்கோ, வைகுண்டத்திற்கோ சென்று அங்கு, "ஹாயாக இருப்பதில் ஆசிரியருக்கு உடன்பாடில்லை. சே... அதெல்லாம் ஒரு வாழ்வா? பின் எது வாழ்வு? சொல்கிறார் கேளுங்கள்:
மீண்டும் பிறப்பேன்; இம்
மேதினியின் யாத்திரையில்
யாண்டும் நடப்பேன்; எம்
யாத்திரையைக் காவியமாய்ப்
பாடுவதில் யாமடையும்
பரவசத்தை யாரறிவார்
மேலும், அவரே தன் கவிதையில்,
"வையம் ஓர் இன்ப வீடு
வாழ்வொரு வரம் என்கின்ற
மெய்மையே எமது வேதம்
விண்ணகம் இங்கு காண்போம்
என்று முழங்குகிறார்.
இது ஒரு மகத்தான படைப்பு. காலத்தை வெல்லும் திறன் கொண்டது. தமிழ்க் கவிதை உலகில் ஒரு மகத்தான சாதனை. அணிந்துரை நல்கிய தவத்திரு ஊரன் அடிகள், இந்த நூல், ஞான பீடப் பரிசு பெறத்தக்கது என்று போற்றுகிறார். நாமும் அதை வழி மொழிகிறோம்.