‘பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக் கூட எந்த எழுத்தாளருக்கும் வைப்பதில்லை’ (பக்., 11) என்று நியாயமாக ஆதங்கப்படும் நுாலாசிரியர், அன்பின் பெருங்கடலாய் தோப்பில் முகமது மீரானை ஆராதித்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் உரையாடிய நேர்காணல்களையும், மீரானின் படைப்புகளான தேங்காய்ப் பட்டணம், மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களையும் இதில் பதிவு செய்துள்ளார்.
சொர்க்க ராகம் மீட்டிய வீணை கம்பிகள் அறுந்து விட்டதன் மூலம், மகத்தான பல படைப்புகள் எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் மக்கள் மனதிற்குள்ளே அழிந்து விட்ட அவலநிலை (பக்., 30).
‘எங்கள் வீட்டு பெயர் கொல்லங்குடி என்பதாகும். அந்த பெயர் நாளடைவில் மறைந்து, தற்போது தோப்பு என்றாகி விட்டது’ என வர்ணிக்கிறார். ‘கலை வறட்சியான ஒரு மொட்டை கிராமமாக மாறி விட்டது’ எங்கள் கிராமம் (பக்., 39).
மீரானின் எழுத்துகளில் இழையோடும், கிராமிய எழிலும், அதிலிருந்து அவர் அன்னியப்பட்டு தொலை துாரம் வந்த போதும், அவரது ஆத்மாவின் வேர்கள் கிராமத்திலேயே ஓடிக் கிடப்பதை ஆழமாகச் சித்தரிக்கும் இந்நுால், பல வரலாற்று தடயங்களையும் தன்னுள் கொண்டுள்ள அருமையான பதிவு.
– பின்னலுாரான்