ஆங்கிலேய நரம்பியல் வல்லுனர், அறிவியல் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளரான ஆலிவர் உல்ப் சேக்ஸ், மருத்துவ உலகில் சந்தித்த அனுபவங்களை பல நுால்களாக தந்திருக்கிறார்.
அதில், நரம்பியல் கோளாறுகளால் மறதி நோய்க்கு ஆளானவர்கள் குறித்து, ‘தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்’ என, ஆங்கிலத்தில் அழகிய நாவலாக தந்துள்ளார்.
இந்த நுாலை தமிழில் படிக்க, அலுப்புத்தட்டாத வகையில் அதே பாணியில் மொழிபெயர்த்து நுாலாக தந்திருக்கிறார், கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி, ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை தலைவர், பேராசிரியர் ச.வின்சென்ட்.
நரம்பியல் நிபுணர் ஆலிவரை பார்க்க, மனைவியுடன் ஒரு நோயாளி வந்திருக்கிறார்.
டாக்டர் ஆலோசனை முடித்த பின், வீட்டிற்கு புறப்பட்டார் அந்த நோயாளி. வந்தவுடன் கழற்றி வைத்திருந்த தொப்பியை எடுக்க வேண்டும்.
ஆனால், பக்கத்திலிருந்த தன் மனைவியை தொப்பியாக நினைத்து, அவரை எடுத்து தலையில் வைக்க போய் விட்டார்.
தனக்கு உடல் என்று ஒன்று இருப்பதையே அறிய முடியாத கிறிஸ்டீனா என்ற பெண், எதையுமே சில நிமிடங்களுக்கு மேல் நினைவில் வைத்து இருக்க முடியாது.
ஆனால், வேடிக்கையான கதைகள் கூறும் தாம்சன், பழைய நினைவுகளில் மகிழ்ச்சி காணும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் என, ஒவ்வொருவருடனான அனுபவங்கள் நுாலாக வந்திருப்பது அருமை.
மன நோய் நிபுணர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் விரும்பி படிக்க வாய்ப்புள்ளது. எல்லாரும் படிக்க வேண்டிய நுால் இது.
– மேஷ்பா