அன்பெனும் சத்தியத்தை அபிராமி அந்தாதி பாடல்களின் வாயிலாக மனங்களில் விதைப்பதே இந்த புத்தகத்தின் சாரமாக உள்ளது.
பாசுரம், -அதன் பொருள் என்ற சாதாரண படிவத்தை கடந்து, அவற்றில் பொதிந்து உள்ள அர்த்தங்களை வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து தரும் விளக்கம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மனோதத்துவ மருத்துவருக்கு அபிராமி அந்தாதி பாடல்கள் ஆறுதலையும், அமைதியையும் தருகிறது. அதுமட்டுமின்றி திருப்புமுனையாக வாழ்வில் ஏற்றத்தையும் தருவதாக கதை அமைந்துள்ளது.
இதில் எடுத்தாளப்பட்ட ஒவ்வொரு பாடலும் ஆன்மிக நுட்பத்தையும், வாழ்வு பாடங்களையும் போதிக்கும் விதமாக உள்ளது. பிரச்னையை சவாலாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை தந்து, வாழ்வு மீதான கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கிறது. சில பாடல்களுக்கு நேரடியான பொருளையும் தாண்டி, மறைமுகமாக இருக்கும் உட்பொருளை வெளிக்கொணர்ந்து காண்பிக்கிறது.
புத்தகத்தில், ‘நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை’ என்ற வரிகளை விளக்க, கார்களை சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை உதாரணமாகக் கூறியுள்ளது சுவாரசியம் தருவதாக உள்ளது. சரணாகதிக்கும், நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை எளிமையான கதை சுட்டிக்காட்டுகிறது.
மனிதர்களுக்கும், இறைவனுக்கும் உள்ள துாரத்தை விளக்கி, அதை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்ற தெளிவான அறிவுரைகள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் நீதிநெறிகளும், வழிகாட்டுதல்களும் அபிராமி அந்தாதியில் உள்ளதை தெளிவாக விளக்கும் நுால்.
-–- தி.க.நேத்ரா