முருக பக்தர்கள், ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட விரும்புவோருக்கு வழிகாட்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ள ஆன்மிக நுால். தமிழகம் முழுதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட முருகன் கோவில்களின் வரலாறு, சிறப்புகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் தெளிவுடன் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது.
வெறும் கோவில்களின் வரலாற்று விவரங்களை மட்டுமல்லாது, அந்த இடங்களுடன் தொடர்புடைய ஆன்மிக அனுபவங்கள், தொன்மையை வெளிப்படுத்தும் கதைகளை அறியத்தருகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களுடன் கூடிய நிகழ்வுகளையும், புனித இடங்களில் கடைபிடிக்கப்படும் பூஜை முறைகள், பரிகார வழிபாடுகள் போன்றவையும் நுணுக்கமுடன் அழகாக தொகுத்து தரப்பட்டுள்ளது.
எழுத்து நடை எளிமையாக உள்ளது. சிறு சிறு கதைகளின் வழியாக தகவல்களை சொல்லும் திறன் வாசிப்போருக்கு ஆர்வமூட்டும். ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள ஆன்மிக வினாடி- வினா புதிர்கள் சிந்தனையை துாண்டு வகையில் உள்ளது. ஆன்மிகம், இலக்கியம் மற்றும் சமூகவியல் என மூன்று கூறுகளும் பின்னிப் பிணைந்துள்ளன.
புனித ஸ்தலங்களுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் ஆதாரத்துடன் தகவல்கள் தரப்பட்டுள்ளது. முருக பக்தர்களுக்கு மட்டுமின்றி தமிழக கலாசாரப் பாரம்பரிய சிறப்பை அறிய விரும்பும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.
ஆன்மிக பயணத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. தேடலுக்கு அழகான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வாசித்து மனம் மகிழ, ஆன்மா தெளிவடைய உதவும் ஆழமான படைப்பு நுால்.
–- இளங்கோவன்