‘இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும், உள்ளடக்கத்திலும் அது எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது.
அந்த வகையில் கவிதைகளால் தன்னை புதுப்பித்துக் கொண்ட கவிஞர் சிற்பி குறித்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிவந்திருக்கிறது சிற்பியின் படைப்புக்கலை நுால்.
ஒரு சிறந்த கவிஞனின் அனைத்து பரிமாணங்களும் இலக்கிய உலகிற்கு முறையாக சொல்லப்படவேண்டும் என்ற முயற்சியின் பலன் தான் இந்தப் புத்தகம்.
சிற்பி படைத்த ‘உத்திகள்’ குறித்தான பாலாவின் கட்டுரை, புதுக்கவிதையின் பொதுத் திறனாய்வாக அமைகிறது. சிற்பி மிகக்குறைவாக கையாண்ட, ‘தொன்மங்கள்’ பற்றி தா.வே.வீராசாமி தேடி எடுத்து தருகிறார்.
சிற்பியின் கவிதைகளில் சாதாரண நிகழ்ச்சிகள் அசாதாரண முறையில் இழைக்கப்படுவதை வரைபடமாகவே விளக்கிக் காட்டுகிறார் செ. சண்முகம். அடித்தள மக்கள் பிரச்னைகளைச் சிற்பி எப்படி அனுதாபத்தோடு அணுகுகிறார் என்பதைப் பொதுவுடைமைப் பார்வையில் சண்முக பாரதி காட்டுகிறார்.
ஒவ்வொரு கட்டுரையும் சிற்பியின் எழுத்தில் எழுத்துத்தரம் பேணப்படுவதை சுட்டிக் காட்டிய வண்ணமே இருக்கிறது. சிற்பி குறித்து இது ஒரு முழுமையான தொகுப்பு.
– ஸ்ரீநிவாஸ் பிரபு