ஆன்மிக தகவல்களுடன் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். பல்வேறு கோணங்களில் இருந்து அலசி, சுவாரசியம் மிக்க செய்திகளை அள்ளித் தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா பாணி கோவில்களே அதிகம்; தமிழக பாணி மிகவும் குறைவு. இவற்றில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் முற்றிலும் மாறுபட்டது. இதன் அமைப்பு முறை குழம்ப வைக்கும்.
இந்த புத்தகம், இந்தக் கோவில் வரலாற்று செய்திகளை மட்டும் சொல்லவில்லை. கோவிலின் அமைப்பு, வழிபாட்டு சிறப்புகள், சிற்பக்கலையின் மிடுக்கு, கல்வெட்டு ஆதாரங்களாக உள்ள வரலாற்று செய்திகள், பிரகாரங்களின் அமைப்பு முறை என அங்குலம் அங்குலமாக தகவல்களை தருகிறது.
எட்டு அத்தியாயங்களை கொண்டுள்ளது இந்த புத்தகம். தொல்லியல் வரலாற்று ஆதார ஆவணங்களை பின்னிணைப்பாக தந்துள்ளது. திருவட்டாறு கோவிலை மற்ற கோவில்களுடன் ஒப்பிட்டு வித்தியாசமான தகவல்களை வழங்குகிறது. இதன் வழியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கோவில்கள் பற்றியும் தெளிவாக அறியலாம். அவற்றை வலம் வந்த திருப்தியையும் அடையலாம்.
படித்த பின், இந்தளவு ஆவணங்களை அலசி ஆராய்ந்து தகவல்களை தர முடியுமா என்ற கேள்வி எழுவது திண்ணம். தமிழகத்தில் ஒவ்வொரு வாசகர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம். ஆன்மிக சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எடுத்துரைத்து பெருமைப்படுத்துகிறது.
– ராம்