'1967 ஜனவரிக்கு முன்பிருந்தே எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர் பனிப்போர் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. 1967 ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் ஆறு மணிக்கு, 'எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டார்' என்ற செய்தி, காட்டுத் தீயாகச் சென்னை நகரில் பரவி, தமிழகமெங்கும் எதிரொலித்தது. பல இடங்களில் கலவரம், பஸ் மறியல், எரிப்புச் செய்திகள்.
அடுத்த நாள் காலை, 'எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொள்ள முயன்றார் எம்.ஆர்.ராதா; இருவரும் மருத்துவமனையில் அனுமதி; இருவர் உயிருக்கும் ஆபத்தில்லை' என்ற பத்திரிகைச் செய்திகள்தான் அமைதியைக் கொண்டு வந்தன.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றபோது நடந்த குறுக்கு விசாரணைகள் மட்டுமே பத்திரிகைகளில் வந்தன. ஆனால் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பின் முழு விவரங்கள் வெளிவரவே இல்லை. அந்தத் தீர்ப்புகளில் பல உண்மைகள் பதிவாகி உள்ளன. இரு பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட கொலை முயற்சி வழக்கு மட்டுமல்ல. ஆதாரபூர்வமான சரித்திரக் குறிப்பு இது.'