அகஸ்தியர் பதிப்பகம், 9ஏ, க்ளைவ்ஸ் பில்டிங், நந்தி கோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி. போன்: 2700 061.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. வடலூர் வள்ளலாரும், நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டியுள்ளார். நோயற்ற ஆரோக்கிய வாழ்வே மிகச் சிறந்த செல்வம் என்று உணர்த்தும் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரிகளால் எழுதப்பட்ட இவ்விரு நூல்களும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான பல அரிய பெரிய செய்திகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.இந்நூலாசிரியர் ஆயுர்வேதத்தில் சிறந்த புலமை பெற்று திகழ்வதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் படித்து பயன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் ஆயுர்வேதத்தின் சாரத்தை இரு நூல்களிலும் பிழிந்து தந்துள்ளார்.இந்த உடல் ஓர் அழகிய நகரம். நான் எனும் தான் வாழுமில்லம். இது ஒரு அழகிய தேர்; அடைய வேண்டியதை அடையச் சிறந்த சாதனம். இதைப் பேணி, இதன் இயக்கங்களில் மிகக் கருத்துடன் இருக்க வேண்டும். (பக்.2 - பாகம்-1) என்று கூறி படிப்போரின் ஆவலை மேலும் தூண்டுகிறார். இந்நூலைப் படிக்கும்போது நம்முடைய உணவிலும், நடைமுறை வாழ்விலும், நாம் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பது புரியும். முதல் பாகத்தில் 66 தலைப்புகளிலும் இரண்டாம் பாகத்தில் 51 தலைப்புகளிலும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் ஒரு குட்டிக் களஞ்சியமாக தந்துள்ளார் ஆசிரியர்.ஒவ்வொரு இல்லத்தரசிகளின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.