கோயங்கா கடிதங்கள்: ஆசிரியர்: டி.ஜெ. ஜார்ஜ், தமிழாக்கம்: ஆர்.நடராஜன். ஏ.சோழராஜன். வி.ரங்காச்சாரி, வெளியீடு: கலைஞன் பதிப்பகம். 10,கண்ணதாசன் சாலை, தி.நகர். சென்னை 600017. (பக்கம்: 272, விலை: ரூ.200)
சுதந்திரப் போராட்டம் தொடங்கி சுதந்திர இந்தியாவின் அவசரநிலைக் காலம் வரை தேசியத் தலைவர்களுடன் பழகிய கோயங்கா துணிச்சல் மிக்க சிந்தனாவாதி. 1942ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தாதுபுஷ்டி லேகிய விளம்பரத்தை வெளியிட்டது. அதே விளம்பரம் பல பத்திரிகைளிலும் வெளிவந்திருந்த போதும் எக்ஸ்பிரஸ் "தனித் தன்மைக்காக' தண்டிக்கப் பட்ட விஷயம் சுவையானது (பக்கம். 45). கடிதங்கள் அடங்கிய பகுதி கோயங்கா பெரிய தலைவர்களுடன் பழகிய விதத்தைப் படம்பிடிக்கிறது. கல்கி சதாசிவம், ராஜாஜி உட்பட பலர் எழுதிய கடிதங்கள் வரலாற்று ஆவணங்கள். மொரார்ஜி தேசாய்க்கு கோயங்கா எழுதிய கடிதம், அதற்கு அவர் எழுதிய பதில் "காமராஜரைப் பற்றிய பல கருத்துக்களை கொண்டிருக்கிறது (பக் 170). பல புதிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. இருண்ட காலத்தை வெளிச்ச மிட்ட சாட்சியம் என்ற அத்தியாயம் நெருக்கடி காலத்தில் எக்ஸ்பிரஸ் பயணித்த சிரமங்களை படம்பிடிக்கிறது. சம்பிரதாயங்களைப் பின்பற்றாத துணிச்சல்காரரை இந்த நூலில் காணலாம்.