669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001 (பக்கம்: 224)
கிறிஸ்துவ மத நிறுவனங்களுக்குள் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இதுவரை ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் பல நூல்கள் வந்துவிட்டன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், அயர்லாந்தில் கிறிஸ்துவ பாதிரியார்கள் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, வாடிகனையே குலுக்கியது வரலாறு. அவ்வகையில், கேரளத்தை சேர்ந்த சிஸ்டர் ஜெஸ்மி, கிறிஸ்தவ நிறுவன அமைப்பில் தான் பட்டபாடுகளை, ஒரு புத்தகமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். ஆனால், சிஸ்டர் ஜெஸ்மி இன்று வரை, இறை நம்பிக்கையாளராகவே தன் வாழ்க்கையைத் தொடர்கிறார். அவர் இந்த நூலில் முன்வைப்பது, கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான விமர்சனத்தை தானே அன்றி, கிறிஸ்துவம் மீதான விமர்சனத்தை அல்ல.
சொல்ல போனால் கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை கூட சற்று மெல்லிய குரலிலேயே சொல்கிறார் என எடுத்துக் கொள்ளலாம். மிகச் சிக்கலான தருணங்களில் கூட தான் இறை நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதில் சிஸ்டர் ஜெஸ்மி மிகக் கவனமாகவே இருந்திருக்கிறார்.
அதேநேரம் தன் மீதான பாலியல் தொந்தரவுகளையும், நிறுவனங்களுக்குள் இலைமறைவு காய்மறைவாக நிகழ்ந்த பாலியல் சம்பவங்களையும் ஆங்காங்கே நாகரிகமான மொழியிலேயே சுட்டிச் செல்கிறார். மத அமைப்புகளில் இது நடக்கக் கூடியது என்று கூறினாலும், இதில் உள்ள கருத்துக்கள் இனி சீர்திருத்த சிந்தனைக்கு அனைவரையும் இட்டுச் செல்லும். ஏனெனில் அவர் "இயேசுவையும் தன்னையும் இணைத்த பாசப்பிணைப்பை தொடர்ந்து சுட்டிக்காட்டுவது அவரது இறைநேர்மையை உணர்த்துகிறது.