செப்., 2013 முதல், மார்ச் 2014 வரை, ‘தினமலர், தி இந்து’ நாளிதழ்களில் வெளியான, 71 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன.
‘அண்டப் புரட்டன் அந்தவாதி/அகிலாண்டப்/புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி – சண்டப்/பிரசண்டன் நியாயவாதி – நாளும்/சகஸ்திரப்புளுகன் சாஷிக்காரனெனும் கியாதி’ (பக்.28) என, வேதநாயகம் பிள்ளையின் பாடலை எடுத்தாண்டுள்ள முதல் கட்டுரையானாலும், ‘நீதிபதிகளுக்கு ஓய்வு தேவை, நீதிமன்றங்களுக்கு அல்ல. நீதிக்கு விடுமுறை என்பதில் நீதியில்லை’ (பக்.263) எனும் இறுதிக் கட்டுரையானாலும் தாம் சொல்ல நினைத்தக் கருத்தை மிகவும் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார் நீதியரசர்.
ஜாதி சமயமும் பொய் (பக். 65), உணவுப் பழக்கம் தனிமனித உரிமை (பக். 80), மதுக்கடைகளைச் சட்டப்படி ஒழிப்பது எப்படி (பக். 105), தேர்தல் வழக்குகளுக்குத் தீர்வு எப்போது? (பக். 211) இப்படி காலச்சூழலுக்கான கட்டுரைகள். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், தன் குரல் மூலம் வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பல வலுவான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
பின்னலூரான்