உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், நுண்ணிய நரம்புகள் மூலம், அந்த செய்தி மூளைக்கு உணர்த்தப்பட்டு, அந்த பகுதியில் வலி உணரப்படுகிறது. எந்த ஒரு நோய்க்கும் உடல் தரும் முதல் எச்சரிக்கை மணி, வலிதான். இந்த நூலானது பாதம் முதல் தலை வரை ஏற்படக் கூடிய வலிகளைச் சொல்லி, வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை என்ன, செய்யக் கூடாதவை என்ன என்பதை விளக்கி, வலி வருவதன் காரணங்களையும், வலி ஏற்படாமல் இருக்க நாம் என்ன விதங்களில் செயல்பட வேண்டும் என்பதையும் சொல்லி ஒரு மருத்துவக் கையேடாகவே அமைந்திருக்கிறது.
கடின உடலுழைப்பு என்பது பெருமளவில் குறைந்துவிட்ட இக்காலச் சூழ்நிலையில் உணவில் கட்டுப்பாடு, சிறுசிறு உடற்பயிற்சிகள் செய்தல், புகை மற்றும் குடியைத் தவிர்த்தல் ஆகிய மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்தாலே பெரும்பாலான வலிகள் நம்மை அண்ட விடாமல், ‘டாட்டா’ காட்டிவிடலாம் என்பது நூலினுள் பொதிந்திருக்கும் செய்தி. நூலாசிரியர், ஒரு இயன்முறை மருத்துவர் என்பதுடன் உளவியல் சிகிச்சை மற்றும் உடல் பருமன் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதால், அவரின் அனுபவ சாரம் நூல் வழியே அனைவருக்கும் பகிரப்பட்டிருக்கிறது.
பால கணேஷ்