‘பனியன் நகரம்’ என்றும், ‘இரண்டாம் பம்பாய்’ என்றும், திருப்பூர் புகழப்படுகிறது. திருப்பூர் பனியன் ஆலைகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றுவோரின் பிரச்னைகளை வைத்துப் பின்னப்பட்ட நாவல் இது.
பஞ்சப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, பனியன் தொழிலாளர்கள் நடத்திய மகத்தான போராட்டம், 1984ம் ஆண்டில் நடந்தது. திருப்பூரைப் புரட்டிப் போட்ட போராட்டம் இது. தொழிலாளர்கள் எப்படி போராடினர் என்பதை ஆசிரியர் விளக்கமாகச் சொல்லிச் செல்கிறார்.
பனியன் நாவலின் நாயகன் சுப்பையா. அவன் போராட்டத்தின் தலைமகன். தியாகமும், தடம் மாறாத திடமான கொள்கையும் அவனது இரண்டு கண்கள். போர்க்குணமே அவனது உயிர் மூச்சு. ஒரு தொழிற்சங்கவாதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு, அவனே இலக்கணம்.
பொதுச் சேவையில் ஆர்வம் கொண்ட எவராக இருப்பினும், இந்த நாவலில் இடம்பெறும் சுப்பையாவைப் படிக்கும்போது, நாமும் இப்படி வாழ வேண்டும், செயல்பட வேண்டும் என்று நினைப்பர். அருமையான பாத்திர வார்ப்பு. ஒரு சிறந்த ரஷ்ய நாவலைப் படித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவசியம் படிக்க வேண்டிய சிறந்த நாவல்.
எஸ்.குரு