பயணக் கட்டுரைகள் பலவிதம். நம்மைக் கையைப் பிடித்து அழைத்துப் போய் உலக நாடுகளைச் சுற்றிக் காண்பித்தவர் ஏ.கே.செட்டியார். அது ஒரு உல்லாசப் பயணம். வரலாற்றின் இருவேறு காலகட்டங்களில் பயணம் செய்தவர்கள் சிட்டியும் சிவபாதசுந்தரமும். அதில் கார் பயணம் இருக்கும்; நடுவே கற்கோவில்களைக் கட்டிய சோழர்களின் தொன்மமும் இருக்கும்.
மணியனின் கட்டுரைகளில் உணவுக்கு உயர்நிலை. அமெரிக்காவில் கிடைத்த அடை, அவியல் என்கிற ரீதியில் அவருடைய எழுத்து. பிலோ இருதயநாத்தைப் பின்பற்றி வனவாசிகளைப் பற்றி எழுதுபவர்கள் ரெங்கையா முருகனும், ஹரி சரவணனும். இந்த வரிசையில் வந்திருக்கிறார் ஜெயக்குமார் சீனிவாசன். இவரது புத்தகம், ‘ஈராக் – நேற்றும் இன்றும்’.
பாக்தாத்தில் இருந்து எழுதும் பச்சைத் தமிழர் இவர். பாசாங்கு இல்லாத பளிங்கு நடை இவருடையது. பயங்கரவாதம், யுத்தம் இவற்றின் அருகிலிருந்து இவர் தரும் வர்ணனைகள் வறுமை, இனிமை, அதிர்ச்சி, கோபம், கேலி என்று மனித அனுபவத்தின் எல்லைகளைக் காட்டுகின்றன.
ஈராக்கில் இந்தியர்களுக்குத் தனி மரியாதை இருக்கிறது என்பதுதான் இந்தப் புத்தகம் நமக்குச் சொல்லும் செய்தி.
‘குர்திஸ்தானில் உள்ள எர்பில் நகரத்தில் புத்தகக் கடைகளை மேயும்போது, நம் காந்தியடிகள் அவரது சத்திய சோதனையை குர்தி மொழியில் சொல்லிக் கொண்டிருந்தார். குர்தி இன மக்களுக்கு காந்தியடிகளின் சரிதம் தெரியுமாம். இவர்கள் ஜான்ஸிராணி இலக்குமிபாயால் உத்வேகம் பெற்றிருக்கின்றனர். இன்றும் குர்தி தொலைக்காட்சியில் தினமும் ஜான்ஸிராணி தொடர் உண்டாம்.’ (பக்.111) கொலை, கற்பழிப்பு ஆகிய கொடூரங்களை விரும்பிச் செய்யும் ஐ.எஸ்., படைகள் பற்றி இவர் தரும் தகவல் அருமை.
‘இன்றைய தேதியில் ஈராக்கில் இருக்கும் மிக வலிமையான, தைரியமான ராணுவப் பிரிவு, பெண் வீராங்கனைகள் அடங்கிய பெஷ்மெர்கா ஒன்றே. இந்தப் படை வருவதைக் கேள்விப்பட்டதும் ஐ.எஸ்., படைகள் இடத்தைக் காலி செய்து விட்டு ஓடியதே பெஷ்மெர்காவின் வலிமையைச் சொல்லும். ஐ.எஸ்., படையினரின் நம்பிக்கையின் படி பெண்களால் கொல்லப்பட்டால் சுவர்க்கம் கிடைக்காது என்பதால், பெண் படைகளால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அவர்கள் ஓடினர்’ (பக். 91).
சுப்பு