சிறுவர்களுக்கான கதைகள் என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய், தெளிவாய் சொல்ல வேண்டும். அந்த வகையில், ஆசிரியர் பத்ம சாஸ்திரியின் கதைகள் பாராட்டுக்குரியவை.
அளவுக்கு அதிகமான கதைமாந்தர்கள் இன்றி, விரிவான வருணனை இல்லாமல், ஏற்ற சொற்களால் ஒவ்வொரு கதைகளையும் அமைத்துள்ளார் பத்ம சாஸ்திரி. நீதி, நன்றியுணர்வு, உழைப்பின் சிறப்பு, நட்பு, இறையருள் என்று, இக்காலகட்டத்திற்கு அவசியமான விழுமியங்களை முன்வைத்து, சிறுவர்கள் மனதில் பதியும்படி கதைகள் இயற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும், சுவாரஸ்யம், வினோதம், ஆச்சரியம், நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்கள் தென்படுகின்றன.
படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில், விலங்குகளும் கதாபாத்திரங்களாக உலவ விடப்பட்டுள்ளன. முத்தான இந்த சமஸ்கிருத கதைகளை, வாசகர்களுக்கு சலிப்பூட்டாத வகையில், மிகவும் எளிமையாக தமிழாக்கம் செய்திருக்கிறார் அலமேலு கிருஷ்ணன்.
சலீம்