காகிதம், அச்சுக்கலை, பட்டு, தேனீர், துப்பாக்கி ரவை என, உலகத்துக்கு மாபெரும் அற்புதப் பங்களிப்புகளை வழங்கிய சீனாவின் வரலாற்றில் நடந்த கலாசாரப் புரட்சிகள், உள்நாட்டுப் போர்கள், மீட்சிப் போராட்டங்களின் விரிவான பதிவே இந்நூல். கடந்த, 5,000 ஆண்டுகளில் நில இழப்புகளாலும், வரவுகளாலும் தன் வரைபடத்தை பல வடிவங்களாக மாற்றிக்கொண்டு வந்த வரலாறு சீனாவுக்கு உண்டு. முற்காலத்தில் சிதறிக்கிடந்த பழங்குடியினர்கள் ஒன்றுபட்டபோது வம்ச ஆட்சிகளின் வசம் கிடந்த சீனா, 17ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியின் திசைகளை நோக்கிச் சென்ற வரலாற்றை அனுபவப் பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார், மூல நூலாசிரியர் வில்லியம் ஹின்டன்.
1947ல், அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு, டிராக்டர் ஓட்டுனர் பயிற்சியாளராகச் சென்ற அமெரிக்கர் ஹின்டன், நசிந்த மக்களின் அவதிச் சூழ்நிலைகளோடு தன்னை ஐக்கியப்படுத்தி, வாழ்நாள் முழுவதும் உழைப்பாளர் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு எழுதிய கலாசாரப் புரட்சிக் கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வரலாற்றுத் திருப்புமுனையாக, சீனாவில் நிகழ்ந்த பாட்டாளி வர்க்கக் கலாசாரப் புரட்சிகள். மா சேதுங் தலைமையில் முதலாளித்துவத்தை வீழ்த்தி, பூர்ஷ்வா சூழ்ச்சிகளை முறியடித்து சோஷலிசப் புரட்சியை நோக்கிச் சென்ற தருணங்கள், அக்டோபர் புரட்சியின் நீட்சி போன்ற அனைத்தும் நூலில் விபரமாகப் பதிவாகியுள்ளன.
1957ல், நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியத்தை விரட்டி, சீனா ஒரு பொதுவுடைமை நாடாக பரிணமித்த பின்னும் எழுந்த கலகக்காரர்களின் சூழ்ச்சிகள், தொழிலாளர் கிளர்ச்சிகள், உழைக்கும் வர்க்கத்தினருக்கும், முதலாளித்துவத்துக்கும் இடையிலான தொடர் அதிகாரப் போராட்டங்கள், மாவோயிசத்துக்குக் கிடைத்த வெற்றிகள் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டு உள்ளன.
எதிர்பார்த்த அளவில் பொருளாதாரச் சமன்பாடு ஏற்படாமல் மக்கள் நேர்கொண்ட துயரங்களையும், காலப்போக்கில், 70களில் ஏற்பட்ட கம்யூனிசக் கட்டமைப்பு பலவீனங்களையும், பொதுவுடைமை வளர்ச்சியைத் தடுக்கவும், தகர்க்கவும் முயன்ற முதலாளித்துவப் போக்குகளையும் வருத்தத்தோடு முன்வைக்கிறார் ஆசிரியர். வரலாற்றுப்பிரியர்கள், பொதுவுடைமையாளர்கள் படிக்க வேண்டிய நூல்.
– கவிஞர் பிரபாகரபாபு