பதினைந்து நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். அனைத்து தரப்பு பெண்களையும் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.
சீனாவின் அரசியல் மாற்றமும் அதனால், பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறைகளையும், பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைகள், ஆண் குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட ஓரினச் சேர்க்கை, சீன சமுகத்திலும், கலாசாரத்திலும் பாலியலின் பங்கு குறித்தும் இந்நூலில் மிக ஆழமாக கூறப்பட்டுள்ளது.
கடந்த, 1989 முதல், 1997 வரையில் சீனாவின் மிகப் பிரபலமான வானொலி தொகுப்பாளினி சின்ரன்.
தன் வானொலி நிகழ்ச்சியின் மூலம் பெற்ற அனுபவங்களையும், சந்தித்த பெண்களின் உண்மையான வாக்குமூலங்களையும், மனக் குமுறல்களையும் பெரும் களப்பணியாகச் செய்து, கடுமையான அச்சுறுத்தல், பெரிய எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்நூலை எழுதியிருப்பது, அவரது மன தைரியத்தை வெளிப்படுத்துகிறது.
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல செய்திகளைப் படிக்கும் போது இன்னும் என்னென்ன மறைக்கப்பட்டுள்ளதோ என்ற எதிர்பார்ப்பையும், மிகப்பெரிய வியப்பையும், சீனத்தின் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
– முனைவர் க.சங்கர்