மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எதை உணர்த்துகின்றன? பிற இனத்தவரின், பிற நாட்டவரின் பண்பாட்டுக் கலாசாரங்களை வெளிப்படுத்துவதோடு, புதுப் புதுப்பாடு பொருள்களில் சிறுகதைகள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன.
அந்த வகையில் சாந்தால் இன மக்களின் பல்வேறு உணர்வுகளை, இதில் உள்ள எட்டுக் கதைகளும் காட்டுகின்றன.
ஜார்க்கண்ட் மாநில மக்களின் வாழ்க்கை முறைகள், அவர் தம் அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை இந்நூலில் காண முடிகிறது. மொழிபெயர்ப்பு என்று தோன்றா வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
அசைவம் சாப்பிடக் கூடாது என்ற கடுமையான விதியை வதோராவில் வசிக்கும் மக்கள் பின்பற்றுவதன் பின்னணியில், வதோராவிற்கு இடம் பெயரும் பிரேம் குமாங் குடும்பம்.
அதனால் மனம் உடைந்து போவதை அசைவம் சாப்பிடுகின்றனர் என்ற கதை காட்டுகிறது. சாந்தால் இனத்துப் பெண்ணான தாளாமை பிழைப்புக்காக மேற்கு வங்கம் செல்கிறாள். அங்கு அவளது வயிற்றுப் பசியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஜவான், தன் காமப் பசியைத் தீர்த்துக் கொள்வதைக் காட்டுகிறது புலம் பெயரத் தகுந்த மாதம் நவம்பர் என்ற கதை.
‘காஸி’ இனத்தைச் சார்ந்த சுலோசனாவின் பல்வேறு உணர்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பகையாளிகளோடு உணவு உண்ணுதல் என்ற கதை.
பத்து வயது சிறுவன், நான்கு வயது பெண்ணைக் கெடுத்து விட்டான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அச்சிறுவன் மீது சுமத்தப்பட்டதைக் கூறுகிறது, ‘ஏற்றத் தாழ்வு’ என்ற கதை.
சுமாரான கதைகளும் உள்ளன. ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் என்ற நூலின் தலைப்பில் அமைந்த சிறுகதை. இந்த நூலுக்குப் பெருமை சேர்க்கும் கதை. ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.
அனல் மின்நிலையம் அமைக்க கோடா கிராமத்தை அரசு கையகப்படுத்திய செய்தியால் மனம் உடைந்து போகின்றனர் அக்கிராம மக்கள்.
மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழாவுக்கு ஜனாதிபதி வருகை புரிவதை ஒட்டி, அவரது முன்னிலையில், நடனமாட, சாந்தால் கிராமிய பாரம்பரிய நடன இசைக்குழு அழைக்கப்படுகிறது.
நடனக் குழுத் தலைவர் மங்கள் மர்மு, நடனமாட மறுத்துவிடுவதோடு, ஜனாதிபதி முன் தயங்காமல் தன் கருத்தை எடுத்துரைக்கிறார். இத்தொகுதியில் சிறந்த கதையாக இருப்பதும் இதுவே!
– ராம.குருநாதன்