நடேச பிச்சமூர்த்தி, 1900ம் ஆண்டு, ஆகஸ்ட், 15ம் தேதியன்று தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வக்கீல் தொழில் நடத்தினார். 16 ஆண்டுகள் தமிழகத்தில் பல பெரிய கோவில்களில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி, 1954ல் ஓய்வு பெற்றார்.
கும்பகோணத்தில் இருந்த காலத்தில் காந்திய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதில் ஈடுபட்டார். 1976, டிசம்பர், 4ம் தேதியன்று, சென்னையில் காலமானார்.
பாரதியாருக்குப் பின், கவிதையில், புதிய திருப்பத்தை ஏற்படுத்திய, பிச்சமூர்த்தி, தமிழ்ச் சிறுகதைத் துறை முன்னோடிகளில் ஒருவராகவும் மதிக்கப்படுகிறார். 127 சிறுகதைகளும், 83 கவிதைகளும், 11 ஓரங்க நாடகங்களும், ஏராளமான இலக்கியக் கட்டுரைகளும் இவரது சாதனைகளைப் பறை சாற்றுகின்றன.
இலக்கியம், நாடகம், மருத்துவம், தாந்த்ரீகம் முதலிய துறைகளில் பரம்பரையாகத் திறமையுள்ளது அவரது குடும்பம். கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த, பிச்சமூர்த்தி, பாரதியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, 1925 முதல் தமிழில் எழுதத் துவங்கினார்.
அவரது கதைகள் எளிமையான நடையில், 20ம் நூற்றாண்டில் முற்பகுதியைத் தெளிவாகக் காட்டுகின்றன!
அருமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார், வெங்கட் சுவாமிநாதன். இனிய, எளிய ஆங்கிலத்தில் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார், தில்லைநாயகம்.
‘பதினெட்டாம் பெருக்கு’ என்று ஒரு கதை. மனைவி வீட்டில் இல்லை; ஊருக்குப் போயிருக்கிறாள். ஒரு ஏழைப் பெண்ணுக்கு அரிசி கொடுத்து உதவி செய்கிறான் கணவன்.
இருட்டிய பின் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் போகிறாள். அந்த ஆண் மனதில் வேண்டாத ஆசைகள் வேர் விடுகின்றன.
ஆனால், அந்தப் பெண் பொழுது சாய்ந்து வந்ததும் மனசாட்சி விழித்துக் கொள்கிறது! அந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு ரூபாய் தானம் கொடுத்துப் போகச் சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமல் கதவைத் தாழிட்டுக் கொண்டு மேல் மாடிக்குச் சென்றுவிடுகிறான்.
விபரீத ஆசையை, அறநெறி உணர்வு, வெற்றி கொண்டு விடுகிறது. கவிதை அழகுடன் சொல்லப்படும் கதை.
‘காபூலிக் குழந்தைகள்’ கதையில் வறுமையில் வாடும் ஒரு தையல்காரனை அறிமுகப் படுத்துகிறார். அவன் நோய் வாய்ப்படும் தன் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க, தன் கையில் இருக்கும் பொன் தாயத்தை விற்கிறான்.
குழந்தைக்கு இலவசமாக வைத்தியம் கிட்டுகிறது! அதனால், பொன் தாயத்து விற்றுக் கிடைத்த பணத்தை மேரி மாதா கோவில் உண்டியலில் போட்டு விடுகிறான்! வறுமையிலும் செம்மை என்று கதை பேசுகிறது.
‘தாய்’ என்று ஒரு கதை. மிகச் சிறிய இந்தக் கதை, கருணையே வடிவான தாய்க் குலத்தை நம் கண் முன் நிறுத்துகிறது!
மணிக்கொடி எழுத்தாளர்களில் புதுமைப் பித்தனுக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தவர் பிச்சமூர்த்தி என்ற உண்மை, இக்கதைகளை படிக்கும்போது புலனாகிறது!
‘ஓர் அழகிய சிறுகதை என்றால், அதைப் படிப்பவனுக்கு உள்ளம் நிரம்ப வேண்டும். சிறுகதை எழுதுபவனுக்கு, சொல்வதை விடச் சொல்லாமல் விடுவது என்னும் தந்திரம் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்.
‘படம் சிறியதாயும், அதில் சித்திரம் வீரியமாயும் வர்ணங்கள் கண்ணைக் கவரும் படியானவையாக இருக்க வேண்டும்!’ என்று சிறுகதைக்கு இலக்கணம் வகுப்பார் நா.ரகுநாதன் என்னும் எழுத்தாளர். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சிறுகதைச் சித்தர் பிச்சமூர்த்தி!
– எஸ்.குரு