அவ்வையார் படைத்த, 109 வரிகளைக் கொண்ட ஆத்திசூடி, 91 வரிகளை கொண்ட கொன்றைவேந்தன், 30 வெண்பாக்களைக் கொண்ட மூதுரை, 40 வெண்பாக்களை கொண்ட நல்வழி.
உலகநாதர் எழுதிய, 13 பாடல்களை கொண்ட உலகநீதி, அதிவீரராம பாண்டியன், ஒரு வரி, இரு வரி, மூன்று வரி பாடல்கள் என பாடிய, 82 பாடல்கள், சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய, 40 வெண்பாக்களைக் கொண்ட, ‘நன்னெறி’ ஆகிய அறநுால்களின் பாடல்களைத் தொகுத்து, அதற்கு கருத்தும், விளக்கமும் புரியும் வகையில் எளிய முறையில் தரப்பட்டுள்ளது.
‘நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை, உயிரைக் கொல்லாமையும், புலால் உண்ணாமையுமே உண்மையான நோன்பு. (பக்., 96)
‘எழுநிலை மாடம் கால் சாய்ந்து உக்கு/ கழுதை மேய பாழ் ஆயினும் ஆகும்’ (பக் 197) எதையும் நிலை என்று நினைத்து ஆணவம் கொள்ளக்கூடாது.
‘பன்னும் பனுவல் பயன்தேர் அறிவு இலார்/ மன்னும் அறங்கள் வலி இலவே’ அறநுால்களின் அறிவுரைகள் கூறும் முறைகளில் செய்யும் அறச் செயல்களே முழுப் பயனையும் தர முடியும். (பக்., 230)
இவ்விதமாக அனைத்து பாடல்களுக்கும் முழு விளக்கம் தந்து இறுதியில் சுருக்கமாக தன் கருத்துரையை பதிவு செய்திருக்கும் புலவரின் பட்டறிவும், பாட்டறிவும் நுால் முழுவதும் விரவிக் கிடக்கின்றது.
படித்துப் பயன் பெறுவதோடு, சிறுவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நல்ல நுால்!
–பின்னலுாரான்