உத்தமதானபுரம் வேங்கட சுப்பையரின் மகனாக, 1855ம் ஆண்டு பிப்ரவரி, மாதம், 19ம் நாள் பிறந்தார். அனைவராலும் அன்புடன், ‘தமிழ் தாத்தா’ என்று போற்றப்படுபவர்.
திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் உளம் கவர்ந்த மாணவர் உ.வே.சா., இவர் இல்லை என்றால் இன்று பல பைந்தமிழ் நுால்கள் அறியப்படாமலேயே அழிந்து போயிருக்கும்.
கிருஷ்ண ஆசிரியர், முத்து வேலாயுதம், சடகோப அய்யங்கார், குன்னம் சிதம்பரம் பிள்ளை, கஸ்துாரி அய்யங்கார், விருத்தாசல செட்டியார் போன்றோரிடம் பல இலக்கண, இலக்கிய நுால்களை உ.வே.சா., கற்றறிந்தார்.
குடந்தை கலைக் கல்லுாரியிலும், சென்னை மாநிலக் கல்லுாரியிலும் பேராசிரியராக பணியாற்றினார். அன்றைய ஆங்கில அரசு, பேராசிரியரின் உயரிய தொண்டுகளைப் பாராட்டி, 1903ம் ஆண்டு, கவுரவப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது. 1906ம் ஆண்டு ‘மகா மாகோபாத்தியாய’ என்ற பட்டம் அரசால் இவருக்கு அளிக்கப்பட்டது.
பல்வேறு போராட்டங்களுக்குப் பின், ‘சீவக சிந்தாமணி’ என்னும் காப்பியத்தை பதிப்பித்தார், உ.வே.சா., அதைத் தொடர்ந்து பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானுாறு, மணிமேகலை, ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை, குறுந்தொகை போன்ற நுால்களையும் பதிப்பித்தார்.
உ.வே.சாமிநாதய்யரின் தமிழ் தொண்டைக் கண்ட, ‘கல்கி’ அவருக்கு, 80 வயதில் சதாபிஷேகத்தின்போது, ‘தமிழ்த்தாத்தா’ என்ற பட்டத்தை வழங்கினார். ‘கல்கி’யால் வழங்கிய இப்பட்டமே நிலைத்து விட்டது.
உ.வே.சா., 1942ம் ஆண்டில் மறைந்தாலும், அவரால் பதிக்கப்பட்ட பல நுால்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். நுாலில், சிறப்பாக தகவல்கள் தரப்பட்டிருக்கினறன.
– முனைவர் க.சங்கர்