மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு எப்படி எல்லாம் உள்ளது என்பதை திருக்குர்ஆன் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. உலகம் அழிந்த பின் என்ன நேர்கிறது? உயிர் எங்கு போகிறது? இந்த ரகசியங்களுக்கு எல்லாம் இந்த அபூர்வமான நுால் வெளிச்சம் காட்டி விடை சொல்கிறது.
மரணத்தின் மறுபக்கத்தை நம் கண் முன் காட்டுகிறது. மறுமை நிகழ்வுக் காட்சிகளை குர்ஆன்ஹதீஸ் செய்திகளின் அடிப்படையில் விளக்குகிறது. அதற்கு ஆதாரமாக இறைத்துாதரின் வேத வாக்கியங்களைக் காட்டுகிறது. ‘பரலோகம் குர்ஆனில்’ எனும் மலையாள மூல நுாலின் தமிழாக்கத்தை ஆசிரியர் சிறப்பாகச் செய்துள்ளார்.
‘களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்கத் துவங்கினான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து, ஆண், பெண் என அவன் பரச் செய்தான்’ (பக்.17). நல்லவர் மரணம் நிம்மதியான நிலையிலும், தீயவர் மரணம் வேதனை துன்பத்திலும் நிகழ்கிறது.
மரணத்திற்குப் பின் ஆன்மாக்கள் ‘பர்ஸக்’ உலகில் வாழும். ‘உலகம் அழியும் நாளில் மக்கள் சிதறிக் கிடக்கும் ஈசல்களைப் போன்று ஆகிவிடுவர். (திருக்குர்ஆன் 101:4)
வாழ்வில் நாம் காண முடியாத மறுமையின் இனிமைகளையும், துயரங்களையும், இந்த நுால் தெளிவாகக் காட்டுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்