வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர், அன்னை, பாரதியார் போன்றவர்களால் புனிதம் சேர்ந்தது புதுச்சேரிக்கு. ஞானபூமியில் தோன்றிய 47 சித்தர்களை அரும்பாடுபட்டு இந்நுாலாசிரியர் தொகுத்து விரிவாக எழுதியுள்ளார்.
பாரதியார், பல சித்தர்களுடன் பழகியவர் என்றும், அவர்கள் பற்றி பாடல்கள் பாடியவர் என்றும் முன்னுரையில் கூறியிருப்பது மிக முக்கியத் தகவலாகும். புதுச்சேரி சித்தர் ஆய்வில், இளைஞர்கள் ஆர்வமுடன் இருப்பதாக எழுதியுள்ளது, எதிர்கால நம்பிக்கை தருகிறது.
அகத்தியர் முதலில் புதுச்சேரி வந்தார். பின், பாம்பாட்டி சித்தரும், கோரக்கரும் வந்து தவமிருந்து, ஜீவசமாதி அடைந்ததை ஆய்ந்து எழுதியுள்ளார். மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளைக்காது சித்தர் ஜீவசமாதி ஆனார்.
புதுச்சேரியில், பற்பல சித்துகள் செய்து, ஜீவசமாதியான, 47 சித்தர்களின் வரலாறும், படமும் கொண்ட இந்நுாலை படிப்பவர் மனதில், பேரானந்தம் பொங்கும்.
–முனைவர் மா.கி.ரமணன்