துாய மனத்துடன் மனிதர்கள் வாழ்வதற்குப் பெரிதும் உதவும் நுாலிது. உடலாலும், நாக்காலும், மனதாலும் மனிதன் செய்யக்கூடிய, 10 தீமைகளையும் போக்குவதற்கு, பவுத்தம் போதிக்கும் எண்மணிக் கொள்கைகளை விளக்குவதாக இந்நுால் உள்ளது.
‘எப்போது விடியும்’ என்ற வினாவிற்கு சேவல் கூவினால் விடியும், வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்தால் விடியும் என்பன போன்ற விடைகளை விலக்கி, ‘எப்பொழுது நமக்கு எதிரில் வருவது நம் சகோதரன் அல்லது சகோதரி என்று எண்ணத்தோன்றுகிறதோ அப்பொழுது தான் விடியும்’ என்ற குருவின் வாசகம்தான் பவுத்தம் என்று ஆசிரியர் விளக்குவதும் (பக்., 34), அருமை.
தமிழகத்தில் பவுத்தம் இருந்த வரலாறு கூறுவதும், அவ்வையார் என்ற பெயரில் ஆறுக்கும் மேற்பட்ட பெண் புலவர்கள் இருந்தனர் என்று விளக்குவதும், புத்தரின் எண் வழி மார்க்கத்தை விளக்குவதும், ஆத்திச்சூடிக்கு, நா.மு.வேங்கடசாமி நாட்டார் விளக்கத்துடன், அயோத்திதாசர் விளக்கத்தையும் ஒப்பிட்டுக் கூறுவதும், நுாலாசிரியரின் புலமை ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. மனித மனதைப் பண்படுத்தும் நோக்கில் வெளிவந்துள்ள நல்ல நுாலிது.
– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து