மகாபாரதத்தில் அம்பை, திரவுபதி, சுபத்திரை இப்படி, 16 மகளிரும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி, கவுந்தியடிகள், தேவந்தி ஆகிய ஐவர் பற்றியும், மணிமேகலையில் மாதவி, சுதமதி, ஆதிரை என வரும் மகளிர் பற்றியும், சீவக சிந்தாமணியில் வரும் குணமாலை, விமலை, பதுமை, சுரமஞ்சரி இப்படி எட்டு மகளிர் பற்றியும், வளையாபதி, குண்டலகேசி, கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களில் வரும் மகளிர் சிறப்புகளையும், அந்தந்த காவியக் கவிதைகளைச் சுருங்கக் கூறி விவரித்திருப்பது நயமாக உள்ளது.
சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள் அவ்வை, ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் ஆகிய, 17 பேரின் சிறப்புகளையும், அவர்கள் பாடியுள்ள இலக்கியங்கள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பெண்ணின் பெருமை பேசும், சங்க இலக்கியங்கள் கட்டுரையும், பெண் கூந்தல் பெருமை கூறும் கட்டுரையும், வித்தியாசமான ஆய்வு. காலத்தை வென்ற காவிய மகளிராக, 70 மாண்புடை மங்கையர் குறித்து இந்நுால் கலைக் களஞ்சியம் போல் அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்நுாலாசிரியரின் சங்கத் தமிழ் ஆய்வு முயற்சிகள் பாராட்டத்தக்கதாகும்.
– பின்னலுாரான்