வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது.
வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது.
வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே எழுதப்பெற்று ஒலிபரப்பானவை என்ற வரையறையைக் குறிப்பிடும் இந்நுால், அந்நாடகங்களை இயற்றியவர்கள் குறித்து, ‘மகத்தான முன்னோடிகள்’ என்ற பகுதியில் விவரிக்கிறது.
இதை அடுத்துள்ள, ‘பொற்காலம்’ என்னும் பகுதி, வானொலியில் நாடகக்கலை சிறப்புற்று மேலோங்கி நின்ற வரலாற்றைச் சுவைபட விவரிக்கிறது.
‘வானொலி நாடகம்’ பற்றிய செய்திகளை அறிய துாண்டுகோலாய் அமைகிறது இந்த நுால்.
– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்