கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள் இவரும் ஒருவர். பாரியின் நண்பராக இருந்து பறம்பு மலையை பலவாறு பாடியவர். கவிஞர் விநாயகமூர்த்தி, பதினாறு தலைப்புகளில் கபிலரின் பாடல்களிலிருந்து பல்வேறு கருத்துகளை இந்நுாலில் அழகுறத் தொகுத்திருக்கிறார்.
கபிலருக்கும், பாரிக்கும் இருந்த நட்புறவு, கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய ஏழாம் பத்து, இன்னா நாற்பது பாடிய கபிலர் முதலியவற்றை முதற்பகுதியில் கூறியுள்ளார். இரண்டாம் பகுதியில், கபிலர் பாடல்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள், உயிரினத் தகவல்கள், மலைக்காட்சியின் எழில் வளம், காதற்காட்சிகளை பாடியுள்ள முறை, உவமைத்திறன் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறார்.
‘கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் நுழைந்தால் பண்டைத் தமிழகம் கண்ணாடி போல் வெளிப்படுத்தும் என்றுரைக்கும் ஆசிரியர், அதற்கான சான்றுகளை பலவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கபிலரின் காதற் பாடல்களை சிறப்பாகவும், சுவைபடவும் எடுத்துக்காட்டியுள்ளார். சங்க மருவிய காலத்துக் கபிலர், சங்க காலத்துக் கபிலரினும் வேறானவர்.
ஆனால், நுாலாசிரியர் சங்க மருவிய காலத்து கபிலரை இதில் சேர்த்திருப்பதும், அக்காலத்தைச் சார்ந்த இன்னா நாற்பது என்ற நுால் தரும் செய்திகளையும் இந்நுாலில் சேர்த்திருப்பதும் பொருந்தாது. சங்க இலக்கிய ஆர்வலர்களுக்குப் பயன்படும் நுால் எனக் கூறலாம்.
– ராம. குருநாதன்