பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய ஆய்வு மற்றும் அலசல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நினைவாக வெளியிடப்பட்டுள்ளது.
தொகுப்பில், 102 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று ஆங்கிலத்தில் உள்ளது. ஜானகிராமன் படைப்புகளை படித்து நுட்பங்களை உள்வாங்கி, கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பார்வைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே படைப்பை பற்றி, பல கோணங்களில் அலசல்களும் உள்ளன.
பேராசிரியர், எழுத்தாளர், வாசகர், மொழிபெயர்ப்பு வல்லுனர், பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர் என பல தரப்பினரும் எழுதியுள்ளனர். படைப்புகளை உள்வாங்கி அவற்றை நோக்கியுள்ள விதம், அலசல் கோணங்கள் வேறுபட்ட நுட்பங்களைக் காட்டுகின்றன.
கடந்த சென்ற எழுத்தாளரின் படைப்புகள் மீது, சமகாலத்தவர் வெளிப்படுத்தும் கருத்துகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய படியாக கொள்ள வேண்டிய புத்தகம்.
தொகுப்பாசிரியர் கல்யாணராமன், ‘குன்று முட்டிய குருவி’ என்ற தலைப்பில் எழுதியுள்ள முன்னுரை அரிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளது. படைப்புகள் மீது ஆழ்ந்த பார்வையை வெளிப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய பெட்டகம்.
– அமுதன்