கர்நாடக சங்கீதம் தொடர்பான அனுபவமும் அனுபவித்ததும் கலந்த கட்டுரை நுால். கர்நாடகச் சங்கீதம் பாடுவோர், தமிழ்ப் பாடலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கல்கி தொடர்ந்து எழுதி வந்தது, தற்காலத்திலும் செயல்வடிவம் பெறவில்லை என்பதை எடுத்துக்காட்டுடன் உணர்த்தியுள்ளார்.
எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி முதலானோர் சிறந்த சங்கீத ரசிகர்கள் என்னும் செய்தியைப் போகிற போக்கில் தெரிவித்துள்ளார். சங்கீதப் புரவலர்கள், ஆர்வலர்கள், சிபாரிசுகள் பற்றி எடுத்துரைத்து, தற்காலத்தில் சங்கீதத்தின் இருப்பை தெளிவுபடுத்துகிறது.
பாபநாசம் சிவன், பெ.துாரன் படைத்த பாடல்களுடன் இசை அறிஞர்கள் படைத்தளித்த பாடல்களையும் தொகுத்துத் தந்துள்ளார். சரளி வரிசை, ஆரோகணம், அவரோகணம், கமகம், சங்கதி போன்ற சொற்களை விளக்குகிறது. கர்நாடக இசை ரசிகர்களும், கர்நாடக இசையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும் படிக்க வேண்டிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்