இருபுறமும் சுழலும் கடிகாரம் முதற்கொண்டு பதினேழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் இதயத்தைத் தொடும் வகையில் அமைந்துள்ளன. போர்வை என்னும் கதை, புரிதலுக்கும், புரியாமைக்கும் உள்ள இடைவெளியை உணர்த்துகிறது. வளர்சிதை மாற்றத்தில் வரும் தாத்தா, நெஞ்சத்தில் நிறைகிறார். மதுரை, திருச்சி, கும்பகோணம் என பல நகரங்களை உள்ளடக்கி, கதை மையங்கள் உள்ளன.
‘எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்’ என்ற கதையில், சொற்களால் ஒரு பெரியப்பாவின் சித்திரம் வரைந்து காட்டப்பட்டுள்ளது. உள்ளத்தில் ஊடுருவும் இந்த வகை கதைகளைப் படித்து முடித்ததும், நின்று நிதானித்து கொஞ்சம் அசைபோடத் தோன்றும். ஆனால், நிதானித்து அசை போட விடாமல், ‘அடுத்து என்ன...’ என்ற கேள்வியுடன் அடுத்த கதைக்கு அழைத்துப் போகின்றன. உருவம், உள்ளடக்கத்தில் சிந்தனையை வெளிப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால்.
– முகிலை ராசபாண்டியன்