சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 188).
சிலப்பதிகாரம் எழுந்த காலம் பற்றி ஆய்வாளர்களுக்கு இடையே இன்றளவும் கருத்து மாறுபாடுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. 22 சுவடிகளை ஒப்பு நோக்கி, கானல் வரி நீங்கலாக ஊழ்சூழ் வரி முடிய 13 காதைகளை 1892ல் தொகுத்து சிலப்பதிகாரம் நூலை வெளியிட்ட உ.வே.சா., முதல் இ.மு.சு., அவ்வை துரைசாமி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற சுமார் 15 அறிஞர்கள் சிலம்பின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டெனவும், மு.ராகவையங்கார் ஐந்தாம் நூற்றாண்டெனவும், வையாபுரிப் பிள்ளை எட்டாம் நூற்றாண்டெனவும் கூறியுள்ள நிலையில், இந்நூலாசிரியரோ "சோழ அரசர்கள் இல்லாத கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட நூல் தோன்றியிருக்க முடியாது. எனவே, 11ம் நூற்றாண்டே சிலம்பின் காலம் என ஆய்வு செய்துள்ளார்.
"இளங்கோவின் உட்கோள் சமண தத்துவங்களைப் பரப்ப வேண்டுமென்பதே' (பக்:35), "கோவலன் என்ற பெயர் தமிழ்ப் பெயரன்று' (பக்:50), "இளங்கோவடிகள் காலத்தில் பதிற்றுப்பதிகங்கள் எழுதப்பட்டன' (பக்:58), உரையாசிரியர் தாம் "கரிகாலன்' என்னும் பெயரை எடுத்தாண்டுள்ளார் (பக்.103), அரும்பதவுரைகாரர் தாம் இளங்கோவைச் செங்குட்டுவன் தம்பியாக்கி விட்டார் (பக்:112), இளங்கோவடிகள் (மாசறுபொன்னே) தமிழ் வழக்காற்றை மாற்றிப் பிற்கால வழக்காற்றைப் பயன்படுத்தியுள்ளார் (பக்:155) போன்றவை சுவைபட ஆய்வு செய்யப்பட்டுள்ள போதிலும் சிலம்பின் காலத்தைஇந்நூல் முழுமையாக வரையறுத்துள்ளதாக அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும், ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நல்ல இலக்கிய வரலாற்று ஆய்வு நூல். பெயர் மாற்றம் பெற்று இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.