சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை வழங்குகிறது. அண்ணனும், தங்கையும் எப்போதும் எலியும், பூனையுமாகத்தான் இருப்பர் என்பதைத் தெரிவிக்கும், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ என்னும் கதையில், காதலை மையமாக வைத்துக் குடும்பச் சூழலை பின்னிக் காட்டியிருக்கிறார்.
திருமண பந்தத்திற்கு முன் காதல் என்னும் ஈர்ப்பு, பலரது வாழ்க்கையில் புகுந்து வெளியேறியிருக்கும். அந்த ஈர்ப்பு, படுக்கை வரைக்கும்கூட இழுத்துச் சென்றிருக்கும். அந்தக் காதலில் பிரிவு ஏற்பட்டால், திருமண வாழ்க்கைக்குள் நுழையாமல் வெற்றிடம் ஆக்கி விடுகின்றனர்.
அவ்வாறு ஆக்காமல் வெற்றியாக ஆக்கியவர்களும் இருக்கின்றனர் என்பதை மென்மையாக எடுத்துரைக்கிறது, ‘ஆசை முகம் மறந்து போமோ’ என்னும் சிறுகதை. தமிழ்ச் சிறுகதை உலகத்தில் முக்கிய படைப்பாளியாக வெளிப்பட்டிருக்கிறார். காதலை விரும்பாதவர்களும் விரும்பும் தொகுதி இது.
– முகிலை ராசபாண்டியன்