ஆன்மிக அன்பர்களுக்கு அருட்கொடையாக வந்துள்ள இந்நுால், மாயாசக்தி அன்னை மீனாட்சியின் பெருமை பேசுகிறது. பக்தி பரவசமூட்டும் எளிய தமிழ் சொற்களால் சங்க காலத்து பாடல்கள் விளக்கப்பட்டு உள்ளன.
முதல், இடை, கடை தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற புலவர்களை, ஞானிகளை, முனிவர்களை விளக்கும் விதம் அருமை. மதுரையை விட்டு பிரியும் போது நக்கீரர் பாடிய, ‘என்றினி மதுரை காண்பேம்...’ என்ற பாடலும், அதன் விளக்கமும் இதற்கு சான்று.
‘சர்க்கரை பந்தலில் தேன்மாரி’ போல இலக்கிய பாடல்களின் தமிழ்ச் சுவையும், பக்தி ரசமும் கலந்து தந்துள்ள அருமையான புத்தகம். நுாலின் நிறைவாக தொகுப்பாளர், ‘இந்துத்துவம் மலர்ந்து விரியவே, வளர்கவே வாழியவே’ என்று கூறி முடிக்கிறார். ஹிந்துக்கள் படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
– ஜி.வி.ஆர்.,