வேதப் பண்பாட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட 52 கட்டுரைகளை உள்ளடக்கிய நுால். வேதத்தின் அடிப்படையில் புதிய செய்திகள் பன்முகத் தேடலுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அரிய தகவல்கள் நிரம்பியது.
‘இறைவன் என்பது ஓர் ஆளுமை அல்ல; ஓர் இயக்கம்... இது தான் வேத வேள்வியின் மையக்கருத்து. இறையே அனைத்துமாக மாறி நிற்கும் பிரபஞ்ச நிகழ்வில் சிற்றுருவாக்கச் சடங்கே வேத வேள்வி’ என கருத்துரைக்கிறார்.
‘வேத வேள்வியின் அடிப்படையாக அமைந்தது, ரிதம் என்னும் கோட்பாடு; அனைத்திலும் வெளிப்படும் தன்னியல்பே ரிதம். இயக்கங்கள் அனைத்தும் ரிதத்தின் வெளிப்பாடு’ என்கிறார்.
வேதங்களில், சோம பானம் ஓர் உந்து சக்தியாக விளங்கியது என்றும், பானச் சடங்கு குறித்து உலக அளவில் கருதப்பட்ட சிந்தனைகளையும் தொகுத்துள்ளார். சோமம் என்பது ஒரு வகையான தாவரம் என்ற தகவலை எடுத்துரைத்து, அது குறித்த ஆராய்ச்சித் தகவல்களையும் தருகிறார். தாமரையோடு அதை தொடர்புபடுத்தும் சூழலையும் காட்டுகிறார்.
அக்னி குறித்து, ரிக் வேதம் குறிக்கும் செய்திகளை, அது குறித்த சடங்குகள், நம்பிக்கை, குறியீடாக ஆக்கிக்கொண்டது பற்றி எல்லாம் எடுத்துரைக்கிறார். குதிரை மோசடிகள், சரஸ்வதி நதி, தமிழ் வேதம் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
சங்க காலத்திலேயே வேதப் பண்பாடு இருந்து உள்ளது என்பதை சான்றுகளோடு சில கட்டுரைகள் விளக்குகின்றன. அஸ்வமேதம், ருத்ரன் குறித்த சிந்தனைகளும் உள்ளன. வேதப் பண்பாட்டை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் அரிய முயற்சி.
– ராம.குருநாதன்