அல்லயன்ஸ் (நூற்றாண்டு கண்ட முதல் தமிழ் புத்தக நிறுவனம்), 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.
தமிழ்ப்பட உலகிற்கு மட்டுமின்றி, இந்தியத் திரை உலகிற்கே ஜாம்பவானாகத் திகழ்ந்ததோடுமின்றி மனித நேயம், வள்ளல் தன்மை போன்ற நற்பண்புகளுக்கு உறைவிடமாக வாழ்ந்தவர் அமரர் சுப்பிரமணியம்.
ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கொத்தமங்கலம் சீனு, ஜி.பட்டு அய்யர், எஸ்.டி.சுப்புலட்சுமி, பேபி சரோஜா, எம்.எஸ்.சரோஜா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, வி.என்.ஜானகி, எஸ்.வரலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி , பி.சரோஜாதேவி ஆகிய திரையுலக நாயக, நாயகியர்களை அறிமுகப்படுத்தியவர்.
நடிகர் ராஜா சாண்டோவை வற்புறுத்தி சென்னைக்கு அழைத்து வந்து, தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றும்படி பணித்தவர்.
(அவர் ஒரு பக்காத் தமிழர். புதுக்கோட்டைக்காரர் என்பதை பலரும் அறிய மாட்டார்கள்! இயற்பெயர்: நாகலிங்கம்). உஷா கல்யாணம் (1936) படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் ஜோடியை வைத்து, ஒரு நகைச்சுவையையும், பக்த குசேலா (1936) எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இரட்டை வேடம் - கிருஷ்ணராகவும், 27 குழந்தைகளுக்குத் தாயான குசேலரி ன் மனைவியாகவும் எடுத்தார். பிரேம் சாகர் (1941) என்ற இந்திப் படத்தை தயாரி த்த முதல் தமிழர் என்னும் பெருமை கொண்டவர்.
அடர்ந்து, பரந்து, விரிந்து காலத்தை வென்று நிற்கும் (60-70 ஆண்டுகளுக்கும் மேலாக) ஆலமரத்தைப் போன்ற அமைப்புகளைத் தோற்றுவித்து, வழி காட்டியவர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, நாதஸ்வர வித்வான்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், நிருத்யோதயா எனும் நாட்டியப் பள்ளி ஆகியவற்றில் பெரும் பங்காற்றினார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது ஒன்றைத் தவிர, தேசிய அளவில் உயர் விருதுகளை அமரர் சுப்பிரமணியம் பெறவில்லையே என்னும் ஆசிரியரி ன் ஆதங்கம் நியாயமானதே! ஆனால், தியாகச் செம்மல்களுக்கு விருதுகள் ஒரு பொருட்டுமில்லை, அதற்காக ஏங்குவதும் இல்லை!
நூலின் நாயகர் குடும்பத்தினர் மட்டுமின்றி, அல்லயன்ஸ் புத்தக நிறுவனத்தாரும், நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடும் தருவாயில் இந்நூல் வெளிவந்திருப்பது சாலப் பொருத்தமே! தரமான தாள், அச்சுப் பதிப்பு, அரி தான பழம் பெரும் கறுப்பு - வெள்ளை புகைப்படங்கள், நூலில் கட்டமைப்பு என்ற அனைத்து அம்சங்களும் முத்தான, முத்திரைப் பதிப்பு இது எனப் பறை சாற்றுகின்றன.
இந்தத் திரை உலகச் சிற்பயின் வரலாற்று நூல் பொக்கிஷமாகப் பவனி வர வேண்டும்.