நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்:224)
கட்டுரைகள் வாயிலாகவும், புதுக்கவிதை மூலமாகவும் பரவலாக அறியப்பட்ட வெ. இறையன்புவின் இரண்டாவது நாவலாக, "சாகா வரம் வெளிவந்துள்ளது. மரணம் குறித்த விசாரணை என்ற சிறு குறிப்புடன் விரியும் இந்தப் புதினத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, தத்துவம் கலந்து, உளவியல் நோக்கில் மிக உயர்ந்த தளத்தில் இருந்து கொண்டு சுவைபட எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
முதல் பகுதியான மரணத்தில், கதாநாயகனான நசிகேதன் தனது மிக நெருங்கிய நண்பர்கள் பலரின் மரணத்தைப் பார்க்கிறான். இந்த மரணங்கள் அவனைப் பாதிக்கின்றன. மரணமில்லா வாழ்வு என ஒன்று இருக்கக்கூடாதா என அவன் மனம் ஏங்குகிறது. மரணமில்லாப் பெருவாழ்வைத் தெரிந்து கொள்ள உள்மனத்தேடலில் இறங்குகிறான். பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டு, தேடலில் இறங்க பயணம் மேற்கொள்கிறான். இது நாவலின் இரண்டாம் பகுதி. கொல்லிமலைப் பகுதியில் விச்ராந்தையாக வனப்பகுதியில் அமைதியும், நிம்மதியும் கிடைக்கிறது. இனி நாவலின் மூன்றாவது பகுதி, பொதிகை மலைப்பகுதியில் வனாந்திரங்களில் அலைந்து திரிந்து "சிரஞ்சீவி வெளியை அடைகிறான். மரண பயத்திற்குள்ளான சிலரை அங்கு சந்திக்கிறான். அந்த "வெளியில் அவர்களிடம் பேசியதில், மரணம் என்பது இயற்கை, யதார்த்தமானது என்பதை உணர்கிறான். நாவல் இத்துடன் முடிவடைந்து விடுகிறது. நாவலாசிரியர், இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகளில் காடு, மலை, இயற்கை பற்றி அரிய தகவல்களை நசிகேதனின் பயண அனுபவமாகச் சொல்லியிருக்கிறார். நாவலுக்கு வலுசேர்க்கும் பகுதிகள் இவை. மிகவும் வித்தியாசமான, புதுமையான விஷயங்களை உள்ளடக்கிய நாவல்.