கவிசக்ரவர்த்தி கம்பன், ஆங்கில இலக்கிய உலகின் முடிசூடாமன்னன் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரது படைப்பாற்றல், பாத்திரத்திறன், கற்பனைவளம், கவிதை நடை என, பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ள இந்நூலில், கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி, ‘மனித மகோதரத்துவம்’ என்ற தத்துவம் பொதுவாக உள்ளதென நிலைநாட்டியுள்ளார் நூலாசிரியர்.
அண்ணலும் நோக்கினான் என்ற கம்பனின் காட்சியை ரோமியோ ஜூலியட் காட்சியுடனும், வெஞ்சின விதியை வெல்ல வல்லமோ என்ற இலக்குவன் கூற்றை, ‘கிங் லியர்’ நாடக மாந்தருடனும், இறப்பு எனும் மெய்மையை வசிட்டன் இராமனிடம் கூறியது போல், உலக நிலையாமையை லேடி மேக்பத் இறந்தபோது பேசுவதும்., பெண்ணாசையால் வீழ்ந்த ராவணனுக்கும், அந்தோணிக்கும் ஒப்புமைகாட்டியும் இப்படியே ஆய்வு நீள்கிறது.
கம்பனின் வைர வரிகளும், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரிகளும் இதில் பெரும்பாலும் உள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய புலமை இவ்வெளிப்பாடுகளில் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழில் கம்பன் படைத்த ஒரு காவியம், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் படைத்த அத்தனை காப்பியங்களையும் உள்ளடக்கியுள்ளது என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது.
கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், அறிய விழைவோர், அவசியம் படிக்க வேண்டிய நல்ல ஒப்பீட்டாய்வு நூல்.
பின்னலூரான்