பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், ‘புதிய தலைமுறை’ வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை, இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த, 2011–2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத் தேர்தல்களும், நீராதாரச் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலானவை.
‘பத்ம விருதுகள், தகுதியானவர்களுக்கு, உரிய காலத்தில் வழங்கப் பெறுதல் வேண்டும். அதற்கு, வெளிப்படையான தேர்வு தேவை. முறையான அளவுகோலைப் பயன்படுத்தி விருதாளர்கள் தேர்வு செய்யப்பெற வேண்டும்’ – ஆசிரியரின் இக்கருத்தை யாராலும் மறுக்க இயலாது. ‘தலைவலிக்குத் தீர்வு, தலையை வெட்டிக் கொள்வதல்ல’ போன்ற தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டி, கட்டுரைகளைப் படிக்கச் செய்கின்றன.
பேரா. ம.நா.சந்தானகிருஷ்ணன்