இந்த நூலில், 46 நூல்களின், இன்றியமையாத கருத்துகள் விவரிக்கப்படுகின்றன. உறவுகள் வீட்டிற்கு வெளியிலும் உள்ளன என்று விளக்கும் அறப்பளீசுர சதக பாடலுடன் (பக்.16) துவங்கும் இந்த நூல், சிறுபஞ்ச மூலம் உள்ளிட்ட அறநூல்களின் பாடல்களையும், திருவாசகம், திருவருட்பா போன்ற சமய இலக்கிய நூல்களின் பாடல்களையும், விதுரநீதி உள்ளிட்ட நீதிநூல்களின் பாடல்களையும், லலிதா சகஸ்ர நாமம் போன்ற பாராயண நூல்களின் பாடல்களையும் மேற்கோள் காட்டி, விரிவாக விளக்குகிறது. பாடல்களை நகைச்சுவை கலந்து விளங்குவதும், நேரில் கூறுவது போன்றே சொற்றொடர்களை கையாள்வதும், படிப்போர்க்கு சிறிதும் அயர்வு தராது.
பீஷ்மர், சிரார்த்தம் செய்தவுடன் பிண்டத்தை, தன் தந்தை சந்தனுவிடம் கொடுக்காது, தர்ப்பைகளின் மீது வைத்த நிகழ்ச்சியை (பக்.120), நாம் அதிகம் கேள்விப்படாத, சாருசர்யா நூலில் இருந்து விளக்குவதும், ஆன்மிக கருத்துகளை அறிவியலோடு இணைத்து கூறுவதும், சுவாரசியமாக உள்ளன.
– டாக்டர் கலியன் சம்பத்து