பல நிகழ்வுகளின் தொடக்கம் அருமையாகவும், ஆச்சரியமாகவும் கூட இருக்கும். நூலாசிரியர், 59 முக்கிய நிகழ்வுகளை எடுத்து, அவற்றின் தொடக்கம் ஏன், எப்படி, எதற்கு என்ற விவரங்களோடு பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மெரீனாவின் முதல் சிலை, உழைப்பாளர் சிலை. அந்த சிலை வர காரணகர்த்தா சிங்காரவேலர், உருவாக்கிய சிற்பி ராய் சவுத்ரி என்ற விவரங்கள் (பக். 231–232), சினிமா ஸ்டூடியோவில் லேப் டெக்னீஷியனாகப் பணியை துவக்கிய இந்தி திரைப்பட பிரபல நடிகர், திலீப்குமாரின் திரையுலக பிரவேசம் (பக்.228), நம் ஜெமினி கணேசனை நினைவுபடுத்துகிறது.
முதன்முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் சிவந்த மண் (பக்.165), தஞ்சை பெரிய கோவில் தான் முதன்முதலில் கிரானைட் கற்கள் பயன்படுத்தி கட்டப்பட்ட கோவில் (பக்.151), நாடாளுமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் திரையுலக பிரமுகர் எஸ்.எஸ்.வாசன் (பக்.137), எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்மணி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜீன் கோதயே (பக்.62) உள்ளிட்ட பல சுவாரசியமான செய்திகளை பின்னணியோடு, எளிய நடையில் ஆசிரியர் விவரித்துள்ளார்.
ந.ஆவுடையப்பன்