சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், புகழ்பெற்ற திருக்கோவில்களில், பதினெட்டு திருக்கோவில்களை தெரிவு செய்து கொண்டு, அவை பற்றி தெரிவிக்கும் ஆன்மிக நூலிது. இந்நூலுள், ஐந்து சிவாலயங்கள், ஐந்து திருமால் விண்ணகரங்கள், ஐந்து திருமுருகன் திருத்தலங்கள், மூன்று அம்பிகை கோட்டங்கள் பற்றிய, நான்கு முதல் பத்து பக்கங்கள் வரையிலான, கட்டுரைகள் உள்ளன.
பதினெட்டு கோவில்கள் பற்றிய, முழு செய்திகளும் இந்நூலில், வழிபாட்டுக்கு செல்லும் அடியார்கள் தாம் வழிபட செல்லும் கோவில் பற்றிய வரலாறு, பக்திப்பனுவல்கள், சிறப்புகள் போன்றவை குறித்து, குறைந்தபட்சத்திற்கு சற்று கூடுதலாக அறிந்திருக்க வேண்டும். அந்த அளவறிந்து, பதினெட்டு திருக்கோவில்கள் செய்திகளை, இந்நூல் வழங்குவதால், இதை, ‘சுருங்கச் சொல்லல்’ என்னும் அழகமைந்த நூல் எனலாம்.
ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும், ஓர் அரிய செய்தியேனும் தெரிவிப்பது, இந்நூலின் சிறப்புகளில் ஒன்றாகும்; ஒரு சான்று பார்ப்போம்.
‘கருணையே வடிவானவள் ஸ்ரீ காஞ்சி காமாட்சி என்பதை கிருத யுகத்தில், 2,000 சுலோகங்களால், துர்வாச முனிவரும், திரேதாயுகத்தில், 1,500 சுலோகங்களால் பரசுராமரும், துவாபர யுகத்தில், 1,000 சுலோகங்களால் தௌம்ய முனிவரும், கலியுகத்தில், 500 சுலோகங்களால் மூக சங்கரரும் பாடி பரவினர்.
மயிலை கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள், போரூர் முருகன், சென்னை ஸ்ரீ காளிகாம்பாள், திருத்தணி முருகன், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், திருக்கூவம் திரிபுராந்தகர், திருவாலங்காட்டு ஸ்ரீ மத் நடராசப் பெருமாள், காஞ்சி வரதராசப் பெருமாள், ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன், காஞ்சி ஏகாம்பரநாதர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், வல்லக்கோட்டை முருகப்பெருமான், சிறுவாபுரி முருகன், வடபழனி ஆண்டவர் போன்ற கடவுளர்களை வழிபட செல்பவர்களுக்கு, இந்நூல் நல்லதொரு கையேடாக அமையும்.
– ம.வே.பசுபதி