திரைத் துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஆசிரியர், தன் அனுபவங்களை எட்டு தலைப்புகளில் பகிர்ந்து கொள்கிறார். கி.பி., 2015 முதல் காகிதக் கப்பல், ஆட்டக்கார தாத்தா, அடிப்பாவி, அம்மு, அதிகாலை மெரினா, வலி, அறியாமை என, அனுபவத் தகவல்கள் நிறைந்த களஞ்சியமாகக் காணப்படுகிறது.
‘காகிதக் கப்பல்’ என்னும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும், திரைப்படத் துறையில் உதவி இயக்குனர்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிக்கிறது.
காதல், காதலியின் நிராகரிப்பு போன்ற சமூகச் சூழல், வாழ்க்கைச் சூழல் கலந்த பலவித உணர்வுகள், ஒவ்வொரு சிறுகதையிலும் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளன. கி.பி., 2015ல் ஏற்பட்ட வெள்ள சேதம், நிவாரணம் போன்றவற்றை எதிர்கொண்ட இளங்கதிர் பாராட்டுக்குரியவர்.
மனதிற்குப் பிடித்து செய்கிற தொழில் எதுவாக இருந்தாலும் அந்தத் தொழில் தான் தெய்வம் என்ற ஆழமான கருத்து, ஆசிரியரின் அடிமனத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறியாமை என்னும் சிறுகதையில் கதை எழுதி, பல இடங்களுக்கும் அலையும் ஒரு மனிதரை அறிமுகப்படுத்துகிறார்.
‘எவனோ ஒருத்தன், நீங்க சினிமாவுக்கு போயி கதை எழுதிக் கொடுத்தீங்கன்னா, பேரும் புகழும் பெரிசா கிடைச்சிடுமுன்னு உசுப்பேத்திவுட்டான் போல’
(பக். 193).
இந்த மனுஷனும் அதை நம்பிக்கிட்டு கோடம்பாக்கத்தை சுத்தி சுத்தி வர்றாரு’ என்று சொல்லி சிரித்தார் என்பது யதார்த்தத்தை கூறுகிறது. காகிதக் கப்பல் தண்ணீர் இல்லாமல் பயணம் செய்கிறது. இந்து நூல், உதவி இயக்குனர் ஒருவரின் அனுபவங்களைப் பேசுகிறது.
– பேரா., முனைவர் ஆர்.நாராயணன்