திருப்பதி பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை தலைவராக இருந்த பேராசிரியர் ந.சுப்புரெட்டியார், 135 நுால்களின் நாயகர்.
இவரது நுாற்றாண்டை திருச்சி சீதாலட்சுமி கல்லுாரியுடன் இணைந்து, சாகித்ய அகாடமி நடத்தியது. இதில் அவரது பல்வேறு ஆளுமைகளை ஆழம் கண்டு, 14 கட்டுரைகள் படிக்கப்பட்டன. இதை ஆய்வு நுாலாக்கித் தந்துள்ளார்.
அறிவியல், அணுக்கரு இயல், கல்வி இயல், பயண இயல், தன் வரலாறு ஆகிய எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்கும் நுால்கள் எழுதியுள்ளார்.
‘இல்லற நெறி’ நுாலில் பிறப்பில் உடல், மனம் பற்றிய பல்வேறு மர்ம முடிச்சுகளை அவிழ்த்து அறிவியல் நோக்கில் எழுதியுள்ளார். இவரது கல்வி உளவியல் நுால் தனிப் பெருமை கொண்டதாகும்.
தன் இறுதி நாள், 90 வயது வரை சற்றும் தளராது தமிழில் எழுதிக் கொண்டே இருந்த பேரறிஞர் சுப்புரெட்டியாரின் முழு ஆளுமையை வெளிப்படுத்தும் அழகு நுால் இது.
– முனைவர் மா.கி.ரமணன்