எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று போற்றப்பட்ட நாரண.துரைக்கண்ணன் என்ற ஜீவா, தம் வாழ்க்கையில் சந்தித்த அரசியல், கலை, இலக்கியம் தொடர்புடைய பிரபலங்களைப் பற்றி இந்நுாலில் பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார்.
அவரிடம், முகம் மாமணி நேர்காணலாகக் கண்டு எழுதியுள்ள இந்நுால், பல பிரபலங்களின் வாழ்க் கையில் நடந்த சிறு சிறு சம்பவங்களை சுவை படச் சொல்கிறது.
பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி முதலிய இதழ்களில் ஆசிரியராக இருந்த துரைக்கண்ணன், பல இளம் எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு ஊக்குவித்தவர்.
அவருடைய இதழ்களில் எழுதிப் பின்னாளில் பிரபலமானவர்களாக, நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், அகிலன், கு.அழகிரிசாமி, தமிழ் ஒளி, கண்ணதாசன் முதலியோரை குறிப்பிடலாம்.
கல்கிக்கு முன்னரே கதை எழுதியவர் ஜீவா என, நா.பார்த்தசாரதி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
தாம் சந்தித்த, 30 பிரபலங்களைப் பற்றிய சுருக்கமான தகவல்களை குறிப்பிட்டுள்ளார் ஜீவா. பாரதிதாசனுக்கு முல்லை முத்தையா வீடு வாங்கித் தந்தது; ஹிந்தி எதிர்ப்பு அறப் போராட்டத்திற்கு தாம் தலைமை தாங்கியது; ராஜாஜி வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக நுாலாக வெளியிட்டது.
காமராஜருக்கு இருந்த இலக்கிய ஆர்வம்; ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் பார்க்க காமராஜரை அழைத்து வந்தது; மறைமலை அடிகளிடம் தமிழ் பயின்றமை; ஓமந்துாராரின் பரிந்துரைப்படி பாரதியார் நுால்களை நாட்டுடைமை ஆக்கியதற்கு உறுதுணையாக இருந்தமை, தமிழ் படிக்கும் முயற்சியில், உ.வே.சா., அவருக்கு இசைவு தராமை முதலியனவற்றை இந்நுால் தகவல் களஞ்சியமாக தருகிறது.
நாரண. துரைக்கண்ணன் பற்றிய நுால்கள் முன்னமே சில வெளிவந்திருப்பினும், இந்நுாலில் காணப்படும் அவருடைய நேர்காணல் ஒரு வரலாற்றுப் பதிவு. இந்நுாலை சுவைபடத் தொகுத்திருக்கும் ஆசிரியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
– ராம குருநாதன்